புதுடெல்லி:பஞ்சாப்பில் ஆபரேஷன் தாமரை தொடங்கியுள்ளது என்றும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை கட்சியில் இழுக்கும் பணியில் பாஜவினர் முயன்று வருகின்றனர் என ஆம் ஆத்மி தலைவர் சவுரப் பரத்வாஜ் குற்றம் சாட்டினார். பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் தொகுதி எம்பியான சுஷில் குமார் ரிங்கு,மேற்கு எம்எல்ஏ ஷீத்தல் அங்குரால் நேற்று முன்தினம் பாஜவில் சேர்ந்தனர். இந்நிலையில், நேற்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சவுரப் பரத்வாஜ் கூறும்போது,‘‘பஞ்சாப்பில் மாற்று கட்சியினரை பாஜவில் இழுக்கும் வேலைகளை பாஜவினர் தொடங்கியுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக பாஜவினர் விரித்த வலையில் ரிங்கு, அங்குரால் விழுந்துள்ளனர். பெரும்பாலான எம்எல்ஏக்களை பாஜவினர் செல் போனில் தொடர்பு கொண்டு, பணம், ஒய் பிரிவு பாதுகாப்பு, மக்களவை தேர்தல் சீட் உள்பட பல்வேறு உறுதிமொழிகளை கூறி ஆசை காட்டியுள்ளனர். இதர மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்தது போல் பஞ்சாப்பிலும் ஆபரேஷன் தாமரையை பாஜ தொடங்கி விட்டது என தெரிகிறது. கடந்த மக்களவை தேர்தலில் ஜலந்தர் தொகுதியில் பாஜ 4ம் இடம் பிடித்தது. இந்த தேர்தலிலும் அந்த கட்சிக்கு அதே இடம் தான் கிடைக்கும்’’ என்றார்.