ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 7 ஆயிரம் லில்லியம் மலர் செடிகள் உற்பத்தி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் அரசு தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். இதனால், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் முதல் மற்றும் இரண்டாம் சீசனின்போது, வண்ண மலர் செடிகள் வைக்கப்படும்.
இந்த செடிகளில் முதல் மற்றும் இரண்டாவது சீசனில் மலர்கள் பூத்துக்குலுங்கும். ஆனால், ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை பூங்காவில் மலர்கள் இருக்காது. அந்த சமயங்களில் லில்லியம் போன்ற ஒரு சில மலர்கள் உற்பத்தி செய்து சுற்றுலா பயணிகள் பார்வையிடும் வகையில் மாடங்களில் அடுக்கி வைப்பது வழக்கம். இந்த நிலையில், மார்ச் மாதம் சென்னையில் நடக்கும் மலர் கண்காட்சிக்காகவும், ஊட்டி தாவரவியல் பூங்காவில் மாடங்களில் காட்சிப்படுத்துவதற்காகவும் 7 ஆயிரம் லில்லியம் மலர் செடிகள் தற்போது உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த மலர் செடிகளில் 3 ஆயிரம் மலர் செடிகள் மட்டுமே சென்னை மலர் கண்காட்சிக்கு அனுப்பப்பட உள்ளது. மீதமுள்ள 4 ஆயிரம் மலர் செடியில் மலர்கள் பூத்தவுடன் சுற்றுலா பயணிகள் பார்வையிடும் வகையில் பூங்கா மாடங்களில் அடுக்கி வைக்கப்படும். தற்போது பூங்கா நர்சரியில் 7 ஆயிரம் லில்லியம் மலர் செடிகள் உற்பத்தி செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.