ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா வளாகத்தில் நள்ளிரவில் கருஞ்சிறுத்தை உலா வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மேற்புறம் உள்ள வனத்தில் இருந்து வெளியேறிய கருஞ்சிறுத்தை நேற்று முன்தினம் நள்ளிரவு பூங்காவுக்குள் புகுந்தது. புல்வெளிகள் மற்றும் நடைபாதை என நுழைவுவாயில் பகுதி வரை உலா வந்த கருஞ்சிறுத்தை, சிறிது நேரத்தில் அருகில் உள்ள வனத்திற்குள் சென்று மறைந்தது. இக்காட்சி பூங்காவில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
தற்போது, அதிகளவு சுற்றுலா பயணிகள் வரும் நிலையில் தாவரவியல் பூங்காவில் சிறுத்தை நடமாடி வருவதால் பூங்கா ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்து சுற்றுலா பயணிகளும் பீதி அடைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு கருஞ்சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.