ஊட்டி : ஊட்டியில் ஸ்டீபன் சர்ச் கல்லறையில் தங்களது மூதாதையர்களின் கல்லறை உள்ளதா என வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தேடி கண்டுபிடித்து ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். குறிப்பாக, கோடைகாலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
எனினும் இச்சமயங்களில் வெளிநாடு, வெளி மாநில சுற்றுலா பயணிகளை காட்டிலும் தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகளை அதிக அளவு வருவார்கள். அதே சமயம் இரண்டாம் சீசன் ஆன செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள். சில சமயங்களில் நவம்பர் மாதம் வரையிலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
இவர்கள் இங்கு வந்து தங்கள் மூதாதையர்கள் வசித்த இடங்கள் கல்லறை தோட்டங்கள், தேவாலயங்கள் ஆகியவைகளை பார்வையிடுவது மட்டுமின்றி தங்களது மூதாதையர்களின் கல்லறைகளுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு செல்வதும் வழக்கம். குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இதுபோன்று தேவாலயங்களை ஒட்டி உள்ள கல்லறைகளில் வந்து தங்களது மூதாதையர்களின் கல்லறைகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு அதனை பார்வையிட்டு அஞ்சலி செலுத்தி விட்டு செல்வது வழக்கம். இவ்முறையும் இரண்டாவது சீசன் முடிந்த நிலையில் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று இங்கிலாந்து நாட்டில் இருந்து ஒரு குழு ஊட்டிக்கு வந்திருந்தது. அந்த குழுவை சேர்ந்த சில சுற்றுலா பயணிகளின் மூதாதையர்கள் கல்லறை ஊட்டி உள்ள ஸ்டீபன் சர்ச் கல்லறையில் உள்ளதாக சிலர் தெரிவித்த நிலையில் அவர்கள் அந்த கல்லறை தோட்டத்திற்கு சென்று தங்கள் மூதாதையர்களின் பெயர்கள் உள்ளதா என அங்குள்ள கல்லறைகளை தேடினர். பின்னர் ஒரு சிலர் தங்கள் மூதாதையர்களின் கல்லறைகளை கண்டுபிடித்து, அஞ்சலி செலுத்தி ஆறுதல் அடைந்தனர். பின்னர், இவர்கள் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா உட்பட பல்வேறு சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்து விட்டு செல்வதாக தெரிவித்தனர்.