ஊட்டி: ஊட்டி அருகே பக்காடா கிராமத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை ஆக்கிரமிப்பை அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஊட்டி அருகே உள்ள தூனேரி ஊராட்சிக்கு உட்பட்ட பக்காடா கிராமத்தின் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் அமர்வதற்காக நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. இந்த நிழற்குடை முறையாக பராமரிக்கப்படாத நிலையில், இதனை அப்பகுதியில் உள்ள சிலர் தங்களது சொந்த தேவைகளுக்காக ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர்.
இதில் அவர்கள் நிழற்குடை கட்டிடத்துக்குள் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர். மேலும் நிழற்குடை முன் பகுதியில் மாட்டு சானம், குப்பைகள், உரங்கள் கொட்டி குவித்து வைத்துள்ளனர். இதனால், பஸ்சிற்கு வரும் பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவிகள் மழை, வெயிலுக்கு அங்கு அமர்வதற்கும், நிற்பதற்கும் இடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, பக்காடா கிராமத்தின் பயணிகள் நிழற்குடை சீரமைத்து பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.