ஊட்டி : ஊட்டி-கூடலூர் சாலையில் சுற்றுலா பயணிகள் வந்த கார் தீப்பற்றி எரிந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேர் உயிர் தப்பினர்.கர்நாடக மாநிலம் பெங்களூர் மல்லேஷ்புரம் பகுதியை சேர்ந்தவர் அஞ்சன்குமார்.
இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 9ம் தேதி ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளார். நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சுற்றி பார்த்துவிட்டு நேற்று மதியம் பெங்களூருக்கு அவர்கள் திரும்பி சென்றுகொண்டிருந்தனர். ஊட்டி-கூடலூர் சாலையில் கார் சென்றபோது, எச்பிஎப் அருகேயுள்ள முருகன் பார்ம் பகுதியில் காரில் இருந்து திடீரென புகை எழுந்தது.
இதைத்தொடர்ந்து, காரில் இருந்த 5 பேரும் கீழே இறங்கினர். அப்போது காரில் முன் பகுதி தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி கார் முழுவதுமாக பற்றி எரிந்தது. இதனால், இந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முழுவதுமாக எரிந்தது. புகை எழுந்ததும் காரில் இருந்தவர்கள் கீழே இறங்கியதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த தீ விபத்து காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.