ஊட்டி : சர்வதேச சுற்றுலா மாவட்டமாக நீலகிரி விளங்கி வருகிறது. இங்கு நிலவ கூடிய குளு குளு காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.
இங்கு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் நோக்கில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் நூற்றாண்டு புகழ்பெற்ற ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ேராஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, தேயிலை பூங்கா மற்றும் மரவியல் பூங்கா உள்ளிட்டவைகள் உள்ளன. இவற்றை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்கின்றனர். குறிப்பாக ஏப்ரல், மே கோடை சீசன் சமயத்தில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
அவ்வாறு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் பூங்காக்களில் இருந்து பல்வேறு வகையான மலர் நாற்றுகளை வளர்ப்பதற்காக வாங்கி செல்வது வாடிக்கை. இந்நிலையில் நடப்பு ஆண்டு கோடை சீசனுக்காக தாவரவியல் பூங்கா உள்ளிட்ட அனைத்து பூங்காக்களும் தயாராகி வருகின்றன.இம்முறை வெயிலின் தாக்கம் தற்போது முதலே அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில் கோடை சீசனின்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த சமயத்தில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்வதற்காக மலர் நாற்றுகள் உற்பத்தி செய்யும் பணிகளும் தீவிரமடைந்துள்ளன.
ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள தோட்டக்கலை வளாகத்தில் அமைந்துள்ள பசுமை குடிலில் ரோஜா நாற்றுகள், குறிஞ்சி மலர் நாற்றுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு தயார் செய்யப்பட்டு வருகின்றன. இவை பணி வெயில் உள்ளிட்ட கால நிலைகளால் பாதிக்காத வண்ணம் தண்ணீர் பாய்ச்சி பாதுகாக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து தோட்டக்கலை துணை இயக்குநர் பாலசங்கர் கூறுகையில், ‘‘ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள தோட்டக்கலை வளாகத்தில் அமைந்துள்ள பசுமை குடிலில் ஒரு வகையான மலர் நாட்டு செடிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இவை ஊட்டி தாவரவியல் பூங்காவில் பயன்படுத்துவதற்காகவும் கோடை சீசனின் போது வரக்கூடிய சுற்றுலாப்பயணிகளுக்கு விற்பனை செய்ய பயன்படுத்தப்படும்’’ என்றார்.