* நகராட்சி கமிஷனர் நேரில் ஆய்வு
ஊட்டி : ஊட்டி ஏடிசி., பார்க்கிங் தளத்தில் தற்காலிக கடைகள் கட்டுவதற்கான பணிகள் துவக்கப்பட்ட நிலையில், கட்டுமான பணிகளை நகராட்சி கமிஷ்னர் ஏகராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில 1500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கட்டிடங்கள் கட்டப்பட்ட பல ஆண்டுகள் ஆன நிலையில், பெரும்பாலான கட்டிடங்கள் உறுதித்தன்மை இன்றி காணப்பட்டது.
இதனால், இந்த கடைகளை இடித்து விட்டு,பார்க்கிங் வசதியுடன் புதிதாக 423 கடைகள் கட்டுவதற்கான பணிகளை ஊட்டி நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.முதற்கட்டமாக ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள 193 கடைகள் இடிக்கப்படவுள்ளது. இந்த கடைகள் இடிக்கப்பட்டால், அவர்களுக்கு மாற்று இடமாக ஊட்டி ஏடிசி., பகுதியில் உள்ள பார்க்கிங் தளத்தில் தற்காலிக கடைகள் கட்டித்தரப்படும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில்,மழை மற்றும் பல்வேறு காரணங்களால் ஊட்டி ஏடிசி., பகுதியில் உள்ள பார்க்கிங் தளத்தில் தற்காலிக கடைகள் கட்டும் பணி தாமதித்து வந்தது.
தற்போது ஊட்டியில் மழைக் குறைந்த நிலையில், தற்போது கட்டுமான பணிகள் துவங்கியுள்ளது. தற்காலிக கடைகள் கட்டுவதற்காக பொருட்கள் தற்போது ஏடிசி., பார்க்கிங் தளத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இதனை நகராட்சி கமிஷ்னர் ஏகராஜ் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அவர் கூறியதாவது: ஊட்டி நகராட்சியின் ஒரு பகுதியில் உள்ள பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிதாக கடைகள் ரூ.17 கோடியில் கட்டப்படவுள்ளன. இங்கு தற்போது கடைகள் வைத்துள்ளவர்களுக்கு ஏடிசி., பார்க்கிங் தளத்தில் தற்காலிக கடைகள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளது.
முதற்கட்டமாக 90 கடைகள் தற்போது கட்டப்படவுள்ளன. இதற்கான பணிகள் தற்போது துவக்கப்பட்டுள்ளது.
இப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, மார்க்கெட்டில் கடை வைத்துள்ள வியாபாரிகளின் கடை இங்கு மாற்றப்படும். அதன் பின், மார்க்கெட்டில் உள்ள கடைகள் இடிக்கப்பட்டு, பார்க்கிங் தளத்துடன் கூடிய புதிய கட்டிடங்கள் கட்டப்படும். இதன் மூலம் மார்க்கெட்டிற்கு வரும் பொதுமக்கள் எளிதாக வாகனங்களை நிறுத்தி பொருட்களை வாங்கிச் செல்ல முடியும். அதேசமயம், வியாபாரிகளுக்கும் புதிய கடைகள் மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய கடைகள் கிடைக்க வாய்ப்புள்ளது, என்றார்.