ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் அடங்கிய கொய்யாதோப்பு, சிட்ரபாக்கம் பகுதியில் மழைநீர் தேங்கியது மட்டுமல்லாமல் வீடுகளுக்குள்ளும் புகுந்துள்ளது. இதன்காரணமாக அந்த பகுதியை சேர்ந்த 50 குடும்பங்களை பேரூராட்சி அதிகாரிகள் அழைத்துவந்து செட்டி தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர். அவர்களுக்கு காலை, மதியம் மற்றும் இரவு நேரங்களில் உணவு வழங்கினர்.அந்த பகுதியில் கட்டப்பட்டு வரும் தடுப்பு சுவர் பணியை முடித்திருந்தால் தற்போது தண்ணீர் ஊருக்குள் வந்திருக்காது.
பிச்சாட்டூர் ஏரியில் தண்ணீர் திறந்து விட்டதால் ஆரணியாற்றில் தண்ணீர் கூடுதலாக வருகிறது. இதனால் தற்போது கலைஞர் நகரில் உள்ள அங்கன்வாடி மையம் மற்றும் அதைச்சுற்றியுள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். ரெட்டி தெருவில் உள்ள சாய்பாபா கோயில் தெருவிலும் மழை நீர் தேங்கியுள்ளது. தேங்கிய மழை நீரை அகற்ற பேரூராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.