சங்கரன்கோவில்: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வடக்குப்புதூரை சேர்ந்த மாரி ராஜா மகன் மாரிச்செல்வம் (25). தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து உள்ளார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் சூதாட்டம் ஆடி வந்துள்ளார். ஆரம்பத்தில் சாதாரணமாக செல்போனில் ஆன்லைன் சூதாட்டத்தை விளையாட ஆரம்பித்துள்ளார்.
நாளடைவில் சூதாட்டத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. கடன் வாங்கி ரூ.15 லட்சம் வரை சூதாட்டத்தில் இழந்ததாக கூறப்படுகிறது. கடனை திருப்பி செலுத்த முடியாத சூழலில் மன வேதனை அடைந்த மாரிச்செல்வம் நேற்று முன்தினம் இரவு வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை மாரிச்செல்வம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.