திருமலை : திருமலையில் ‘சுத்த திருமலை-சுந்தர திருமலை’ திட்டத்தின்கீழ் ஒரு நாள் பயிலரங்கம் நடந்தது. இதில், திருமலை திருப்பதி தேவஸ்தான இணை செயல் அதிகாரி சதாபார்கவி பங்கேற்றார்.உலக புகழ்பெற்ற இந்துக்களின் புனித நகரம் திருமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதற்காக நவீன தொழில் நுட்பத்துடன் சிறந்த சுகாதார பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில், திருப்பதியில் உள்ள சுவேதா அலுவலகத்தில் ‘சுத்த திருமலை-சுந்தர திருமலை’ திட்டத்தின்கீழ் ஒரு நாள் பயிலரங்கம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திருமலை திருப்பதி தேவஸ்தான இணை செயல் அதிகாரி சதாபார்கவி பங்கேற்று பேசியதாவது:
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ‘சுத்த திருமலை-சுந்தர திருமலை’ நிகழ்ச்சி திருமலையில் தொடர்ந்து நடத்தப்படும். திருமலை மற்றும் திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிறுவனங்களில் சிறந்த சுகாதார மேலாண்மையை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்த நிபுணர்களின் ஆலோசனைகளை பெறுவதற்காக இந்த பயிலரங்கம் நடத்தப்படுகிறது. இதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். தேவஸ்தான சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இப்பயிலரங்கை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
தொடர்ந்து, பிரபல ஆன்மீகவாதி ஜொன்னலகட்டா ராமமூர்த்தி, ஸ்வச் ஆந்திரா மாநகராட்சி ஆலோசகர் ஜெயபிரகாஷ், விசாகப்பட்டினம் மாநகராட்சி கூடுதல் ஆணையர் சன்யாசி, ராஜமகேந்திராவரம் மாநகராட்சியின் அன்னமய்யா, சிங்கப்பூர் பிளானட்வைஸ் நிறுவன நிறுவனர் அனில்குமார், திருப்பதி மாநகராட்சி கண்காணிப்பாளர் ரவி ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் சிறப்பாக தூய்மை பணிகளை செய்த 12 தொழிலாளர்களை கவுரவித்து பரிசுகளை வழங்கப்பட்டது. இதில் சுகாதார அலுவலர் தேவி, சுவேத இயக்குநர் பிரசாந்தி, கூடுதல் சுகாதார அலுவலர் சுனில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.