சென்னை : சமத்துவமும் வளர்ச்சியும் ஒற்றுமையும் நிறைந்த இந்தியாவை மீட்டெடுப்போம் என குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் மலையாள மக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலையாள மொழியில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பான காணொலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், திராவிட மொழி குடும்பத்தின் உடன்பிறப்புகளான திராவிட மக்கள் அனைவருக்கும் ஓணம் நல்வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். திராவிட பண்பாட்டுடன் இரண்டற கலந்துள்ள ஓணத்தையும் விட்டு வைக்காமல் ஒரு தரப்பினர் வாமன ஜெயந்தி என அதன் அடையாளத்தை பறிக்க முயல்வதாக கூறியுள்ள முதலமைச்சர், கேரள மக்களே இத்தகைய முயற்சிகளை புறக்கணிப்பார்கள் என கூறியுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், பரஸ்பர அன்பும் நல்லிணக்கமும் கொண்ட தேசமாக மாறி அனைவரையும் சமமாக நடத்துவோம். மலர்கள், விருந்து மற்றும் மகிழ்ச்சி நிறைந்த ஓணம் வாழ்த்துக்கள். எல்லாரையும் ஒன்றுபோல பார்க்கும் அரசு மத்தியில் ஆட்சிக்கு வர வேண்டும். சமத்துவமும் வளர்ச்சியும் ஒற்றுமையும் நிறைந்த இந்தியாவை மீட்டெடுக்க அனைவரும் உறுதியேற்கும் நாளாக ஓணம் திருநாள் அமையட்டும்,”என அவர் தெரிவித்துள்ளார்.