Wednesday, May 1, 2024
Home » 27 ஆண்டு பழமையான விருது பெற்ற கம்பம் கிளை நூலக கட்டிடம் சீரமைக்கப்படுமா?

27 ஆண்டு பழமையான விருது பெற்ற கம்பம் கிளை நூலக கட்டிடம் சீரமைக்கப்படுமா?

by Lakshmipathi

*முழு நேர நூலகமாக மாற்றவும் கோரிக்ைக

*வாசகர்கள், பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பு

கம்பம் : அரசின் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சியளிக்கும், விருது பெற்ற கம்பம் கிளை நூலகம் 27 ஆண்டு பழமையானதால் இடிந்து விழும் தருவாயில் உள்ளது. கட்டிடம் இடிந்து விபத்து ஏற்படும் முன் கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் 1956 ஆண்டு தொடங்கப்பட்டது கம்பம் கிளை நூலகம். நாற்பது ஆண்டுகள் வாடகை கட்டிடத்தில் இயங்கிவந்த இந்த நூலகத்திற்கு, கம்பம் டி.எஸ்.காமாட்சி கவுடர் அரசு மருத்துவமனை பின்புறம் தானமாக வழங்கிய 10 சென்ட் நிலத்தில், சொந்த கட்டிடத்தில் 1996ம் ஆண்டு முதல் கம்பம் கிளை நூலகம் செயல்படத் தொடங்கியது. தற்சமயம் 120 புரவலர்களையும், 6300க்கும் மேற்பட்ட உறுப்பினர்களையும் கொண்டிருக்கும் இந்த நூலகத்தில் பாடநூல்கள், பொதுஅறிவு, போட்டித்தேர்வு, குடிமைப்பணி நூல்கள், அகராதி, கலைக்களஞ்சியம், வரலாற்று நாவல்கள், கதை, கவிதை என சுமார் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.

இந்நூலகத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவும், கணிப்பொறி பிரிவும் உள்ளதோடு, தேனி மாவட்டத்தில் அரசின் போட்டி தேர்வுகளுக்கு வாசகர் வட்டத்தால் இலவச பயிற்சி அளிக்கும் மையமாக இந்த நூலகம் மட்டுமே செயல்பட்டு வருகிறது. வாசகர் வட்டம் மூலம் மாதந்தோறும் பொதுமக்கள் மத்தியில் நூலகப் பயன்பாட்டு விழிப்புணர்வு நிகழ்வுகள், கலந்துரையாடல், நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் புத்தக கண்காட்சி, நூலகங்களுக்கு தேவையான நன்கொடை பொருள்கள் பெறுதல் போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

சிறந்த செயல்பாட்டுக்காக இக்கிளைநூலகம் தமிழக அரசின் 2020ம் ஆண்டுக்கான சிறந்த நூலகமாக தேர்வு செய்யப்பட்டு நூலக ஆர்வலர் விருது பெற்றுள்ளது. தற்போது இங்கு அரசின் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இணையதள வசதியுடன் கூடிய கணிப்பொறியினை இலவசமாக பயன்படுத்தவதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஐந்து கணினிகள் உள்ளது.

இவ்வளவு சிறப்புமிக்க கம்பம் தெற்கு கிளை நூலகத்தின் கட்டிடம் கட்டி 27 ஆண்டுகள் ஆனதால் தற்போது மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. கட்டிடத்தின் நுழைவுப்பகுதி மற்றும் உள்ளே மேற்கூரை வழியே மழைநீர் ஒழுகுகிறது. இதனால் அரிய புத்தகங்கள் அழிந்துபேகக்ககூடிய வாய்ப்புகள் உள்ளது. மேற்கூரையின் ஒருபகுதி கீழே விழும் அபாய நிலையில் உள்ளதால் அப்பகுதிக்கு வாசகர்கள் செல்லாதவாறு கயிறுகட்டி தடுக்கப்பட்டுள்ளது. நூலகத்தின் கழிப்பறை மேற்கூரை சேதமடைந்ததோடு, உட்புறமும் இடிந்து சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால், இங்கு வரும் வாசகர்களும், போட்டித்தேர்வு இலவச பயிற்சிக்கு வரும் பெண்களும் மிகவும் சிரமப்படுகின்றனர்.

கடந்த ஆண்டு தமிழக அரசு பொது நூலகத்துறையில் அனைத்து மாவட்டங்களிலும் நூலகங்களை மின்னணு சேவை நூலகங்களாக மாற்ற 500 நூலகங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதுபோல் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நூலகங்களில் மெய்நிகர் நூலகங்கள் (விர்சுவல் லைப்ரரி) கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் இவை இரண்டுக்கும் கம்பம் நூலகம் தகுதியாக இருந்தும் அடிப்படை கட்டமைப்பு சரியில்லாமல் இருந்ததால் கம்பம் கிளை நூலகத்திற்கு கிடைக்கவில்லை. எனவே இடிந்துவிழும் நிலையில் உள்ள கம்பம் கிளை நூலக கட்டிடத்தை சீரமைக்கவும், மாணவர்களும் போட்டி தேர்வாளர்களும் பயன்படுத்தும் வகையில் இந்த நூலகத்தை முழுநேர நூலகமாக மாற்றவேண்டும் என்றும் வாசகர்வட்டம் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வாசகர்கள் கூறுகையில் ,‘‘கடந்த ஜனவரிமாதம் கம்பம் தொகுதி சின்னமனூர் ஒன்றியம் வேப்பம்பட்டியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், கலந்து கொண்ட அப்போதைய மாவட்ட கலெக்டர் முரளீதரனிடம், பிரதான கோரிக்கையாக கம்பம் கிளை நூலகத்தில் மராமத்துபணிகள் செய்து தர வேண்டும் என கம்பம் எம்எஎல்ஏ ராமகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். அதற்கு கலெக்டர் தனது சொந்த நிதியில் சிறப்பு கவனம் செலுத்தி, விரைவில் மராமத்துது பணிகள் செய்து வாசகர்கள் அச்சமின்றி படிப்பதற்கு ஏற்பாடு செய்துதருவதாக வாக்களித்தார். ஆனால் அவர் இடமாறுதல் பெற்று போனதோடு அதுவும் நின்று போனது.’’ என்றனர்.

மேற்கூரை, கழிப்பறை மிகவும் சேதம்

இதுகுறித்து வாசகர்கள் வட்ட தலைவர் கவிஞர் பாரதன் கூறுகையில், ‘‘ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை வசிக்கும் கம்பம் நகரில் பொது மக்களுக்கு பயனுள்ளதாக விளங்கும் இந்த கிளை நூலகத்தின் கட்டிடம் 27 ஆண்டுகள் பழமையானது என்பதால் மேற்கூரையும், கழிப்பறையும் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. அதுபோல் போதுமான நேர வசதியில்லாததால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பொதுமக்கள், போட்டித் தேர்வாளர்கள், அதிக நேரம் நூலகத்தைப் பயன்படுத்த முடியவில்லை. எனவே இந்த நூலகத்தின் இடிந்த கட்டிடத்தை சீரமைக்கவும், இக்கிளை நூலகத்தினை முழு நேர நூலகமாக (காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை) மாற்றவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

You may also like

Leave a Comment

twenty − 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi