ஒடுகத்தூர் : ஒடுகத்தூர் அருகே பைக்கில் சாராயம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் போலீசார் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் சாராய தடுப்பு வேட்டையிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஒடுகத்தூர் அடுத்த வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஏரியூர் அடுத்த தாமரைக்குட்டை வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த பைக்கில் 2 லாரி டியூப்களில் சுமார் 80 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், பைக்கை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட தொங்குமலை செங்காடு கிராமத்தை சேர்ந்த ஜெய்சங்கர்
(24) என்பதும், சட்ட விரோதமாக மலை பகுதியில் சாராயம் காய்ச்சி அதனை பல்வேறு கிராமங்களுக்கு கொண்டு சென்று விற்று வருவதும் தெரியவந்தது.இதையடுத்து போலீசார், பைக்குடன் லாரி டியூப்களில் இருந்த சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து ஜெய்சங்கரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.