சென்னை: பெரியமேடு மூர் மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று முன்தினம் மூர் மார்க்கெட் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, வாலிபர் ஒருவர் கையில் பையுடன் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி வந்தார். அவரை பிடித்து, அவரிடம் இருந்த பையை சோதனை செய்த போது, அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நரேஷ் நாயக் (32) என்பதும், ஒடிசா மாநிலத்தில் இருந்து உயர் ரக கஞ்சாவை ரயில் மூலம் கடத்தி வந்து மூர் மார்க்கெட் பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.