புபனேஷ்வர் : ஒடிசா மக்களுக்கு மாதம் 100 யூனிட் மின்சாரம் இலவசம், கல்லூரி மாணவிகளுக்கு ரூ.14,000 உதவித்தொகை மற்றும் ஏழை பெண்களுக்கு ரூ.25,000 திருமண உதவித்தொகையாக வழங்கப்படும் என்று பிஜு ஜனதா தளம் வாக்குறுதி அளித்துள்ளது. ஒடிசாவில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் மே 13ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 4 கட்டங்களாக நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சியின் தேர்தல் அறிக்கையை அந்த கட்சியின் தலைவரும் ஒடிசா மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் வெளியிட்டார். அதன்படி தமிழ்நாட்டில் நடைமுறையில் இருப்பது போன்று 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்க தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள திருமண உதவித் தொகை திட்டத்தை பின்பற்றி ஏழை பெண்களுக்கு ரூ. 25,000 திருமண உதவித் தொகை வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஒடிசா என்ற திட்டத்தின் கீழ் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.14, 000மும் மாணவர்களுக்கு ரூ.12,000 உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சுய உதவிக்குழுக்களுக்கு வட்டி இல்லாத கடன் ரூ. 15 லட்சமாக உயர்த்தப்படும், நாட்டிலேயே முதன்முறையாக இளைஞர் மேம்பாட்டுக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் தனது நூற்றாண்டை 2036ம் ஆண்டு கொண்டாட உள்ள நிலையில்,2034ம் ஆண்டிற்குள் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக ஒடிசா மாற்றப்படும் என்று பிஜு ஜனதா தள தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.