சென்னை: சென்னையின் 2வது விமான நிலையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் ரூ.20,000 கோடி முதலீட்டில் 2028க்குள் விமான நிலையம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4,700 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தமிழ்நாடு அரசு முன்னதாக தெரிவித்தது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் சிறுவள்ளூரில் 1.75 சதுர மீட்டர் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது. நிலத்தின் உரிமையாளர்கள் தங்களது கோரிக்கை, ஆட்சேபனைகளை 30 நாள்களுக்குள் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விமான நிலையத்தின் திட்ட அறிக்கை முதல்முறையாக வெளியிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம், சென்னை பரந்தூரில் புதிய கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் விரைவில் அமைக்க வாய்ப்புள்ளது.
இந்த விமான நிலையத்திற்காக காஞ்சிபுரத்தில் உள்ள பரந்தூர் மற்றும் 19 கிராமங்களில் 3,774.01 ஏக்கர் பட்டா நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளது. நிலம் கையகப்படுத்துதல் மற்றும் நிதி அனுமதி வழங்குவதற்கான அரசு ஆணையும் வெளியிடப்பட்டுள்ளது. முன்பை விட 770 ஏக்கர் கூடுதலாக கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் வரும் நாட்களில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.