ஐஸ்வால்: ஒன்றிய பாஜக அரசை கண்டு மாநில அரசும், எங்களது கட்சியும் பயப்படவில்லை என்று மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா தெரிவித்தார். மிசோரமில் முதல்வர் ஜோரம்தங்கா தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஐஸ்வாலில் அம்மாநில முதல்வர் ஜோரம்தங்கா, கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசுகையில், ‘இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அல்லது காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. நம்முடைய கட்சியான ‘எம்என்எப்’ (மிசோ தேசிய முன்னணி) பாஜக தலைமையிலான பாஜக கூட்டணியில் தான் உள்ளது.
அதேநேரம் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் ‘எம்என்எப்’ கூட்டணி வைத்திருப்பதால், பாஜகவின் நோக்கங்களுக்கு நம்முடைய கட்சி துணைபுரியும் என்று அர்த்தமல்ல. ஒன்றிய அரசை கண்டு, மாநில அரசும், நம்முடைய கட்சியும் பயப்படவில்லை. இந்த ஆண்டு மிசோரமில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. மிசோரமுக்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான மியான்மர் அகதிகளை மாநில அரசு திருப்பி அனுப்பாது. அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வரும். நாடு முழுவதும் ெபாது சிவில் சட்டத்தை கொண்டு வர, ஒன்றிய அரசு முயற்சித்து வருகிறது. அதனை நம்முடைய கட்சி தொடர்ந்து எதிர்க்கும்.
மத்தியில் ஆட்சி மாறினாலும் கூட, நம்முடைய கட்சி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாது’ என்றார். மிசோரமில் விரைவில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. ஏற்கனவே மணிப்பூர் விவகாரத்தால் அண்டை மாநிலமான மிசோரமிலும் பதற்றம் நிலவி வருகிறது. இப்பேர்பட்ட சூழலில் ஒன்றிய அரசுக்கு எதிராக தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மிசோரம் முதல்வர், கூட்டணிக்கு எதிராக பேசியது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.