திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட உளுந்தை கிராமத்தில் தனியார் ஆயில் கம்பெனி ஒன்று உள்ளது. இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜு ராம் (20) என்பவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்துள்ளார். கம்பெனி அருகிலேயே வாடகைக்கு அறையெடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் பணியில் இருந்த ராஜூராம் பணி முடித்துவிட்டு கீழே இறங்கி வரும் போது திடீரென அருகில் இருந்த கொதிகலனில் கால் தவறி உள்ளே விழுந்ததாக கூறப்படுகிறது.
இதில் பலத்த தீக்காயமடைந்த அவரை சக பணியாளர்கள் உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜூராம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.