Sunday, June 2, 2024
Home » இயல்பு நிலை திரும்பியது திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்

இயல்பு நிலை திரும்பியது திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்

by Arun Kumar

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இயல்பு நிலை திரும்பியதாலும், பள்ளிகளுக்கு விடுமுறை என்பதாலும் நேற்று பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்காக குவிந்தனர். இதனால் நாழிக்கிணறு பஸ் ஸ்டாண்டில் பக்தர்களின் வாகனங்கள் நிறைந்து காணப்படுகிறது.நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17, 18ம் தேதிகளில் பெய்த பலத்த மழையால் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டது. ெநல்லை, தூத்துக்குடி முக்கிய சாலைகள் சேதமடைந்ததால் போக்குவரத்து ஆங்காங்கே துண்டிக்கப்பட்டது.

தற்போது சாலைகள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு, மாவட்டத்தில் போக்குவரத்து தொடங்கி உள்ளது. இதனால் திருச்செந்தூர் வரும் பொதுமக்களும், முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களும் மகிழ்ச்சியடைந்தனர். ரயில் பாதைகள் சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருவதால் விரைவில் ரயில் போக்குவரத்தும் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமாகி தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.

இயல்பு நிலை திரும்பியதால் கடந்த சில தினங்களாக திருச்செந்தூர் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் பஸ், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களிலும், தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், சங்கரன்கோவில், நெல்லையில் இருந்து பாதயாத்திரையாகவும் வந்த வண்ணம் உள்ளனர். பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளதால் பிற மாவட்டங்களில் இருந்து திருச்செந்தூருக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. மேலும் விரதமிருந்து பாதயாத்திரை வரும் பக்தர்கள் வேல்குத்தியும், காவடி எடுத்தும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடியும் இலவச பொது தரிசனத்தில் அதிகளவிலும், ரூ.100 கட்டணப் பாதையில் குறைவாகவும் தரிசனம் செய்து வருகின்றனர். நாழிக்கிணறு பஸ் ஸ்டாண்டில் பக்தர்கள் வந்த கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் நிரம்பி வழிகின்றன.

You may also like

Leave a Comment

4 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi