*நெல்லை, சங்கரன்கோவில் அருகே பரபரப்பு
கழுகுமலை : தென்காசி நாடாளுமன்ற தொகுதி சங்கரன்கோவில் சட்டமன்றத்திற்குட்பட்டது கே.கரிசல்குளம், கைப்படம் கிராமங்கள். இக்கிராமங்களில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், பள்ளியின் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என இரு கிராம மக்களும் நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக இரு கிராம மக்களும் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, நேற்று நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக இரு கிராம மக்களும் அறிவித்தனர். அதன்படி நேற்று அவர்கள் வாக்குப்பதிவை புறக்கணித்தனர். சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா எம்எல்ஏ இரு கிராம மக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.
மேலும் வருவாய் கோட்டாட்சியர் கவிதா தலைமையில் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தியும் கிராம மக்கள் வாக்களிக்க மறுத்து தொடர்ந்து தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் கே.கரிசல்குளம் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது. 1112 வாக்குகள் கொண்ட இந்த வாக்குச்சாவடியில் நேற்று மாலை 6 மணி வரை 10 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன.
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணக் ேகாரி நெல்லை திருத்து கிராமத்தில் பொதுமக்கள் மக்களவைத் தேர்தலை புறக்கணித்து கோயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. இந்த வாக்குச்சாவடியில் 997 ஓட்டுக்களில் 17 ஓட்டுக்கள் மட்டுமே பதிவானது.