சென்னை: அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கை: என்எல்சி நிறுவனம் தனது 2-ம் சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இந்நிலையில், அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரது வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல், உறுதி செய்யப்பட வேண்டும் என்ற நிலையில் அதிமுக உறுதியாக இருக்கிறது. தற்போது என்எல்சி நிர்வாகம் தன்னிச்சையாக நில எடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.
விவசாயிகளின் கோரிக்கையான மறுசீரமைப்பு மற்றும் மறுகுடியமர்வு; சட்டப்படி போதிய சம அளவு இழப்பீடு; வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத் தொகை ஆகியவற்றிற்கு நிரந்தரமான முடிவை எடுத்துவிட்டு நில எடுப்பில் இறங்க வேண்டும் என்று என்எல்சி நிறுவனத்தை வலியுறுத்துகிறேன்.