Thursday, May 16, 2024
Home » நிதிஷ் குமார் ரெட்டி அதிரடி அரைசதம்: சன்ரைசர்ஸ் திரில் வெற்றி: அர்ஷ்தீப் அசத்தல் பந்துவீச்சு வீண்

நிதிஷ் குமார் ரெட்டி அதிரடி அரைசதம்: சன்ரைசர்ஸ் திரில் வெற்றி: அர்ஷ்தீப் அசத்தல் பந்துவீச்சு வீண்

by Ranjith

முல்லன்பூர்: பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. மகாராஜா யாதவிந்த்ரா ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்துவீசியது. டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா இணைந்து ஐதராபாத் இன்னிங்சை தொடங்கினர். ஹெட் 21 ரன் (15 பந்து, 4 பவுண்டரி) விளாசி அர்ஷ்தீப் வேகத்தில் தவான் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த மார்க்ரம் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

அபிஷேக் 16 ரன் (11 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), திரிபாதி 11 ரன்னில் பெவிலியன் திரும்பினர். ஐதராபாத் 9.4 ஓவரில் 64 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், அதிரடியாக விளையாடிய நிதிஷ் குமார் ரெட்டி 32 பந்தில் அரை சதம் அடித்தார். கிளாசன் 9 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். நிதிஷ் குமார் – அப்துல் சமத் ஜோடி 6வது விக்கெட்டுக்கு 20 பந்தில் 50 ரன் சேர்த்து அசத்தியது. சமத் 25 ரன் (12 பந்து, 5 பவுண்டரி) நிதிஷ் குமார் 64 ரன் (37 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

கேப்டன் கம்மின்ஸ் 3, புவனேஷ்வர் 6 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். கடைசி பந்தை சந்தித்த ஜெய்தேவ் உனத்கட் இமாலய சிக்சராகத் தூக்க… சன்ரைசர்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன் குவித்தது. ஷாபாஸ் 14 ரன், உனத்கட் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் பந்துவீச்சில் அர்ஷ்தீப் 4, கரன், ஹர்ஷல் தலா 2, ரபாடா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 180 ரன் மட்டுமே எடுத்து, 2 ரன் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. அதிகபட்சமாக சஷாங்க் சிங் 46 ரன் (25 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினார். அஷுதோஷ் சர்மா 33 ரன், சாம் கரண் 29 ரன் எடுத்தனர். சன்ரைசர்ஸ் பந்துவீச்சில் புவனேஷ் குமார் 2 விக்கெட் வீழ்த்தினார். 3வது வெற்றியை பதிவு செய்த சன்ரைசர்ஸ் 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.

You may also like

Leave a Comment

eleven + 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi