மும்பை: அமலாக்கத்துறை சோதனைக்கும், தேர்தல் பத்திர நன்கொடைக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி ஒன்றிய பாஜக அரசு அதிக நன்கொடைகளை பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், ஊகங்களின் அடிப்படையில் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதாகவும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை நடவடிகளுக்கு முன்னதாக நன்கொடை அளித்த நிறுவனங்கள் மீதும் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே அமலாக்கத்துறை உள்ளதாக குறிப்பிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தல் பத்திர விவரங்களை வழங்குவதற்கு முன் அதிக பணிகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.