நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தொடரும் உறைபனியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான அவலாஞ்சியில் இன்று காலை 0 டிகிரி வெப்பநிலை பதிவாகி உள்ளது. தலைகுந்தாவில் 1 டிகிரி செல்சியஸ், உதகை தாவரவியல் பூங்காவில் 2.3 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.
மலை மாவட்டமான நீலகிரியில் வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்க வேண்டிய குளிர் சீசன் இந்த ஆண்டு சுமார் 75 நாட்கள் தாமதமாக தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படுகிறது.
அதற்கேற்ப இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவுகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாலை நேரங்களில் குறைந்தபட்ச வெப்பநிலையாக பல்வேறு பகுதிகளில் 0 டிகிரியாக பதிவானது.
அதிகாலை நேரங்களில் நிலப்பரப்பிற்கு மேல் படியும் நீர்த்துளிகள் பனித்துகள்களாக காணப்படுவதால் உறை பனியாக காட்சியளிக்கிறது. வாகனங்கள் மற்றும் புல்வெளிகள் மீது உறை பனி படிந்துள்ளதால் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல காட்சியளிக்கிறது.
அப்பகுதியில் கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்கள் காலை 9 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உறை பனி தாக்கம் இருந்த நிலையில் இன்று அவலாஞ்சி பகுதியில் 0 டிகிரி வெப்பநிலை பதிவாகி உள்ளது. தலைகுந்தாவில் 1 டிகிரி செல்சியஸ், உதகை தாவரவியல் பூங்காவில் 2.3 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.