கோத்தகிரி: நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு சுற்றுலா வருவது வழக்கம். அவ்வாறு வரக்கூடிய சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், நீலகிரி மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலை துறையினர் ஒன்றிணைந்து ஆண்டுதோறும் கோடை விழா நடத்துவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான கோடை விழா கோத்தகிரி நேரு பூங்காவில் 12வது காய்கறி கண்காட்சியுடன் இன்று துவங்கியது.
அதேபோல் உதகை உருவாகி 200வது ஆண்டு நிறைவு பெறுவதையொட்டி, நிறைவு விழாவும் இன்று நடந்து வருகிறது. நேரு பூங்காவில் நடைபெறும் காய்கறி கண்காட்சியை இன்று காலை தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி எம்.பி., ஆ.ராசா ஆகியோர் துவக்கி வைத்தனர். இக்கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், மலை காய்கறிகள், சமவெளி பகுதிகளில் விளையக்கூடிய நாட்டு காய்கறிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பார்வையாளர்களை கவரும் வகையில், 1.5 டன் எடையில் 25 அடி உயரத்தில் குடை மிளகாயால் வடிவமைக்கப்பட்டுள்ள மக்காச்சோளம், 1.2 டன்னில் பரங்கிக்காய், கேரட் உள்ளிட்ட காய்கறிகள் மூலம் வடிவமைக்கப்பட்ட ட்ராகன், 600 கிலோ எடையில் ஊதா நிற கத்தரிக்காயால் உருவாக்கப்பட்ட யானைகள், 400 கிலோ எடையில் உருளைக்கிழங்கு முருங்கை காயால் வடிவமைக்கப்பட்ட கம்பு, 200 கிலோ எடையில் கத்தரிக்காய், பூகோஸ், கேரட், பீட்ரூட், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளால் வடிவமைக்கப்பட்ட உதகை, 200, 100 கிலோ எடையில் ஊதா நிற கத்திரிக்காய், பஜ்ஜி மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட டெடிபேர், 1.5 டன்னில் அனைத்து வகையான காய்கறிகளை கொண்டு அமைக்கப்பட்ட பிரமாண்டமான நுழைவு வாயில், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. காய்கறி கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.