ஊட்டி: நீலகிரி மாவட்ட காவல்துறையில் 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற தனிப்பிரிவு எஸ்ஐயை தனது காரில் வீட்டிற்கு எஸ்பி அனுப்பி வைத்தார். நீலகிரி மாவட்ட காவல்துறையில் கடந்த 35 ஆண்டுகளாக ரவி என்பவர் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றினார். கடந்த 11 ஆண்டுகளாக தனி பிரிவில் சிறப்பு எஸ்ஐ மற்றும் எஸ்ஐ ஆக ரவி பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று அவர் ஓய்வு பெற்றார். இவருக்கு ஊட்டியில் உள்ள எஸ்பி அலுவலகத்தில் பிரிவு உபசார விழா மாவட்ட எஸ்பி பிரபாகர் தலைமையில் நேற்று நடந்தது.
பின்னர் அவரை வீட்டிற்கு வழி அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.
அப்போது நீலகிரி எஸ்பி பிரபாகர், எஸ்.ஐ.க்கு சல்யூட் அடித்து, தான் பயன்படுத்தும் கார் மூலம் ஜெயில்ஹில் பகுதியில் உள்ள ரவியின் வீட்டிற்கு அவரை போலீசாருடன் வழியனுப்பி வைத்தார். இதனால் ரவி நெகிழ்ச்சி அடைந்தார். காவல்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவருக்கு மாவட்ட எஸ்பி தனது காரை கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தது போலீசாரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் நீலகிரி மாவட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் எஸ்பி பிரபாகரை பாராட்டி வருகின்றனர்.