ஊட்டி: மேட்டுப்பாளையம் – உதகை இடையிலான மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பசுமையான பள்ளத்தாக்குகள், இதமான சூழல், குளுகுளு நீர்வீழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை ரசிப்பதற்காகவே தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் இந்த மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதற்கிடையே கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அண்மையில் பெய்த மழை காரணமாக மலை ரயில் பாதையில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்து ரயில் பாதை சேதமானது இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை இயக்கப்படும் மலை ரயில் போக்குவரத்து கடந்த 22-ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 22 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட நீலகிரி மலை ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து முன்பதிவு செய்த 184 சுற்றுலா பயணிகளுடன் மலை ரயில் உற்சாகமாக புறப்பட்டு சென்றது. ரயிலின் முன்பு செல்பி எடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.