Thursday, May 9, 2024
Home » நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் கவனம் ஈர்த்த இளம்பெண் எம்.பி.. ஆவேசத்துடன் பாரம்பரிய மாவோரி ஹக்கா நடனமாடிய வீடியோ வைரல்..!!

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் கவனம் ஈர்த்த இளம்பெண் எம்.பி.. ஆவேசத்துடன் பாரம்பரிய மாவோரி ஹக்கா நடனமாடிய வீடியோ வைரல்..!!

by Nithya

வெலிங்டன்: நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் மாவோரி பழங்குடியின இனத்தை சேர்ந்த இளம்பெண் எம்.பி பாரம்பரிய பாடலுடன் ஆற்றிய உரை உலக முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. நாடாளுமன்றத்தில் முதல் உரையை தொடங்கும்போதே பழங்குடியினரின் ஹக்கா நடனமாடி பெண் எம்.பி. ஆவேசத்தை வெளிப்படுத்திய வீடியோ இணையத்தில் கோடிக்கணக்கானோரால் கொண்டாடப்பட்டு வருகிறது. அடக்கு முறைகளை சந்தித்த நியூசிலாந்தின் மாவோரி பழங்குடியின மக்களின் வெற்றி முழக்கம் என்றே இதை சொல்லலாம். போருக்கு செல்லும் மாவோரி பழங்குடியின வீரர்களை வழியனுப்பவும், விருந்தினர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கவும் ஆடப்படும் மாவோரி ஹக்கா என்பதும் நடனத்தை நியூசிலாந்து நாடாளுமன்றத்திலேயே ஆவேசத்துடன் அரங்கேற்றியுள்ளார்.

அந்நாட்டு இளம்பெண் எம்.பி. அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.ஆன ஹனா ரவ்ஹிதி மைபி கிளார்க் நாடாளுமன்றத்தில் முதன்முறையாக பேச அழைக்கப்பட்ட உடன் தங்களது மாவோரி இனத்தின் பாரம்பரிய பாடலை பாடி பேச்சை தொடங்கினார். அப்போது பாரம்பரியமான மாவோரி ஹக்கா நடனத்தையும் அவர் ஆவேசமாக அரங்கேற்றியது நாடாளுமன்றத்தையே அதிர வைத்தது. நியூசிலாந்து நாடாளுமன்ற வரலாற்றில் 170 ஆண்டுகளுக்கு பிறகு மாவோயி பழங்குடியினத்தில் இருந்து இளம் எம்.பி.யாக தேர்வாகியுள்ளார் 21 வயதே ஆன ஹனா ரவ்ஹிதி மைபி கிளார்க்.

இவர் அரசியல்வாதியாக மட்டுமின்றி மாவோரி மொழி, அம்மக்களின் நிலம், பாரம்பரியத்தை காக்கும் பணியிலும் தீவிரமாகவே தன்னை ஈடுபடுத்தி கொண்டவர். ஆவேசத்துடன் பேசியது மட்டுமின்றி தான் சார்ந்த பழங்குடியின மக்களின் உரிமையை பாதுகாப்பதற்காக உயிரையும் இழக்கவும் தயார் என்று உருக்கமாகவும் பேசியுள்ளார் ஹனா. நியூசிலாந்து இளம்பெண் எம்.பி.யின் ஆவேசம் மற்றும் உருக்கமான பேச்சு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. சுமார் 3 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றிருக்கும் ஹனா எம்.பி.யின் பேச்சு உலகம் முழுவதும் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நாடாளுமன்றத்தில் தனது செயல்பாடு திட்டமிட்ட ஒன்று அல்ல என்று விளக்கம் அளித்திருக்கும் ஹனா, அவையில் இருந்த சூழ்நிலை மற்றும் அங்கிருந்த தன் இன மக்கள் அளித்த உற்சாகத்தால் அவ்வாறு நடந்து கொண்டதாக தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

8 + 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi