நெல்லை: நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 45 பேர் திமுக, 3 பேர் காங்கிரஸ், மதிமுக, முஸ்லீம் லீக், மார்க்சிஸ்ட் தலா ஒருவர் உள்ளனர். மீதமுள்ள 4 கவுன்சிலர்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 6ம் தேதி நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை 38 திமுக கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு, மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவிடம் ஒப்படைத்தனர். அதை பரிசீலித்து அந்த தீர்மானத்தின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் ஜன.12ம் ேததி நடைபெறும் என மாநகராட்சி கமிஷனர் அறிவித்திருந்தார்.
அதன்படி மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்துவதற்கான கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு மாநகராட்சி மைய அலுவலகமான ராஜாஜி மண்டபத்தில் துவங்கியது. மாமன்ற அறையில் சுமார் 30 நிமிடம் கமிஷனர் காத்திருந்தும் வாக்கெடுப்புக்கு ஒரு கவுன்சிலர்கூட வரவில்லை. இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் கூறுகையில், “வாக்கெடுப்பு தீர்மானத்தில் பங்கேற்க கவுன்சிலர்கள் யாரும் வரவில்லை. எனவே மேயர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. அடுத்த ஓராண்டுக்கு இத்தகைய தீர்மானத்தை கொண்டு வர இயலாது’’ என்றார்.