நெல்லை: நெல்லை மாநகராட்சி குப்பை கிடங்கில் 2 நாட்களாக பற்றி எரியும் தீயால் கடும் புகைமூட்டம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு சங்கரன்கோவில், ராமையன்பட்டி என்ற பகுதியில் அமைந்துள்ளது. அங்கு 32.5 ஏக்கர் பரப்பளவில் உள்ள குப்பை கிடங்கில் மாநகராட்சியில் இருந்து தினசரி 110 டன் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
குப்பையிலுருந்து உரம் தயாரிக்க குப்பைகள் எடுக்கப்பட்டபோதிலும் அப்பகுதியில் ஏராளமான குப்பைகள் குவிந்து கிடக்கின்றது. இந்நிலையில் நேற்று இரவு லேசான தீவிபத்து ஏற்பட்டுது. காற்றின் வேகம் அதிகமானதால் தீ மளமளவென பரவியது. இதனால் சுற்றுவட்டாரம் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இந்த தீ குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் அப்பகுதிக்கு விரைந்து வந்தனர்.
இதையடுத்து நெல்லை, பாளையங்கோட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருந்தபோதிலும் அப்பகுதியிலிருந்து வெளியேறும் புகை சுமார் 5 கி.மீ தொலைவுக்கு பரவி காணப்படுவதால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் நெல்லை சங்கரன்கோவில் 300க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினாலும், மாநகராட்சி ஆணையர் நேரடியாக வந்து இதற்கான தீர்வினை அளிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.