Wednesday, May 15, 2024
Home » நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் ஜனாதிபதியிடம் மு.க.ஸ்டாலின் மனு: சென்னை விமான நிலையத்தில் நேரில் வழங்கினார்

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் ஜனாதிபதியிடம் மு.க.ஸ்டாலின் மனு: சென்னை விமான நிலையத்தில் நேரில் வழங்கினார்

by Dhanush Kumar

சென்னை: மாணவர்களின் நலனை காக்க நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை மனு அளித்தார். சென்னையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டார். பின்னர் அவர் டெல்லி புறப்படும் முன் சென்னை விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது, தங்களின் ஒப்புதலுக்காக ஓராண்டுக்கும் மேலாக நிலுவையில் உள்ள, இளங்கலை மருத்துவ பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை சட்ட முன்வடிவு 2021க்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என தான் எழுதிய கடிதத்தை ஜனாதிபதியிடம் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு (நீட்) அடிப்படையிலான மாணவர் சேர்க்கை, ஏழை மற்றும் பின்தங்கிய வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு எதிரானது என்பதை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் பிளஸ் 2 மதிப்பெண்கள் மூலம் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடந்தது. இந்த செயல்முறை கடந்த காலங்களில் மாநிலத்தில் நல்ல பலன்களை அளித்தது. ஒன்றிய அரசு, நீட் தேர்வை அறிமுகப்படுத்தியதால், ஒன்றிய சட்டங்களில் செய்யப்பட்ட பல்வேறு மாற்றங்கள் காரணமாக பிளஸ் 2 மதிப்பெண்கள் மூலம் நடந்த சேர்க்கை முறை நிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.

மேலும், நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகளை ஆராய்ந்து, மாற்றுவழிகளை செயல்படுத்துவதற்கு தேவையான பரிந்துரைகளை அரசுக்கு வழங்க நியமிக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையிலும், பல்வேறு விவாதங்கள் நடத்தப்பட்டும், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் கடந்த 2021ம் ஆண்டு செப்.13ம் தேதி ‘தமிழ்நாடு இளநிலை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை சட்டமுன்வடிவு, 2021’ நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு ஆளுநருக்கும் கடந்த 2021ம் ஆண்டு செப்.18ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநரும் 5 மாத காலத்திற்கு பிறகு, சட்ட முன்வடிவினை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பிய நிலையில், கடந்த 2022ம் ஆண்டு பிப்.8ம் தேதி சட்டமன்றத்தில் மீண்டும் இந்த சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற வேண்டி ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர், சட்டமுன்வடிவு தமிழ்நாடு ஆளுநர், ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு, ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமுன்வடிவு தொடர்பாக ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், ஒன்றிய உயர்கல்வி துறை, ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் ஆயுஷ் அமைச்சகம் கோரிய அனைத்து விளக்கங்களும், ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு உரிய காலத்திற்குள் வழங்கப்பட்டுள்ளதாக தேதி வாரியாக குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் சார்பில் போதிய விளக்கங்கள் அளிக்கப்பட்ட பிறகும் இந்த விஷயத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால், கடந்த 2023ம் ஆண்டு ஆக.14ம் தேதி தங்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதில், நீட் தேர்வினால் பின்தங்கிய வகுப்பை சார்ந்த மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் மாணவர்கள் தற்கொலைகள் குறித்தெல்லாம் குறிப்பிட்டு, இனியும் தாமதிக்காமல் மேற்படி சட்டமுன்வடிவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தேன். அதோடு, ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சமீபத்திய கேள்விகளுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இதுவரை இந்த சட்டமுன்வடிவிற்கு ஒப்புதல் வழங்கப்படாத நிலை உள்ளது கவலையளிக்கிறது.

இந்த சூழ்நிலையில், நீட் விலக்கு தொடர்பான சட்ட முன்வடிவிற்கு ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்டுள்ள அதீத காலதாமதம், அதிக கட்டணங்களை செலுத்தி பயிற்சி பெற முடியாத, பல தகுதி வாய்ந்த மாணவர்களின் மருத்துவ சேர்க்கையை பறித்துள்ளது. தமிழ்நாட்டில் பரந்த சட்டமன்ற, அரசியல் மற்றும் சமூக ஒருமித்த கருத்தின் நோக்கத்தை செயல்படுத்திட இயலாமல் முடக்கியுள்ளது. இந்த உணர்வுப்பூர்வமான பிரச்னையில் உடனடியாக தலையிட்டு, நீட் விலக்கு தொடர்பான மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

* 2022 பிப்.8ம் தேதி சட்டமன்றத்தில் மீண்டும் நீட் விலக்கு மசோதா சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதல்பெற ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்பட்டது.

* ஒன்றிய சுகாதார, குடும்ப நல அமைச்சகத்தின் சமீபத்திய கேள்விகளுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் பதிலளிக்கப்பட்டும் இதுவரை சட்டமுன்வடிவிற்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை.

* நீட் விலக்கு தொடர்பான சட்ட முன்வடிவிற்கு ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்டுள்ள அதீத காலதாமதம் பல தகுதி வாய்ந்த மாணவர்களின் மருத்துவ சேர்க்கையை பறித்துள்ளது.

You may also like

Leave a Comment

eighteen + two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi