மதுரை: தமிழகத்தில் நீட் தேர்வால் அரியலூர் அனிதா முதல் 10க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தற்கொலை செய்துள்ளனர். சமீபத்தில் சென்னை குரோம்பேட்டையில் மாணவர் ஜெகதீஸ்வரன், அவரது தந்தை தற்கொலை செய்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்து, அவர்களின் உயிரைப் பறிக்கும் உயிர்க்கொல்லியாக நீட் தேர்வு உருவெடுத்துள்ளது.
இந்த தேர்வை திணிக்கும் ஒன்றிய பாஜ அரசையும், ஆளுநர் ஆர்என் ரவியையும் கண்டித்து, தமிழகத்தில் மதுரை தவிர அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களிலும் கடந்த 20ம் தேதி திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மதுரை அண்ணா நகரில் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் இன்று காலை 9 மணி முதல் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.
இந்த போராட்டத்தை திமுக மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் பி.மூர்த்தி, கோ.தளபதி எம்.எல்.ஏ, மணிமாறன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி மற்றும் மாணவ, மாணவியர், அவர்களின் பெற்றோர், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பங்கேற்றுள்ளனர். நீட் நேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டு மக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வகையில், தன்னார்வலர்களும் பொதுமக்களும் தங்களின் கருத்துகளை எடுத்துரைத்தனர்.