ராமநாதபுரம்: நெடுந்தீவு அருகே கரை ஒதுங்கிய ராமேஸ்வரம் பகுதி விசைப்படகு மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள், நேற்று ஏராளமான படகுகளில் புறப்பட்டு சென்றனர். அதில் 9 மீனவர்கள் சென்ற படகு, நெடுந்தீவு அருகே கரை ஒதுங்கி பாறைகள் நிறைந்த பகுதியில் சிக்கி கொண்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விசைப்படகில் பழுது ஏற்பட்டதாக தெரிகிறது.
நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்களின் படகு கரை ஒதுங்கியதை அறிந்த இலங்கை கடற்படை அதிகாரிகள், படகினை கைப்பற்றி அதில் இருந்த 9 தமிழக மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். எஞ்சின் கோளாறு காரணமாக படகு கரையொதுங்கியதா? அல்லது எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்தார்களா? என்ற கோணத்தில் தமிழக மீனவர்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் ராமேஸ்வரம் பகுதி விசைப்படகு மீனவர்கள் 9 பேரும் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.