அம்பத்தூர்: பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் யஸ்வந்த் (24), சட்டக்கல்லூரி மாணவரான இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு அம்பத்தூர் அடுத்த புதூர் அருகே பைக்கில் சென்றபோது, அவரை பின்தொடர்ந்து 2 பைக்குகளில் வந்த 6 பேர், யஸ்வந்தை திடீரென வழிமறித்து, கத்தியால் சரமாரியாக வெட்டினர். யஸ்வந்த் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டதால், மர்ம நபர்கள் தப்பினர்.
தகவலறிந்து வந்த அம்பத்தூர் போலீசார், படுகாயமடைந்த யஸ்வந்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, தப்பிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.