திருமயம்.: திருமயம் அருகே நடைபெற்ற மீன் பிடி திருவிழாவில் திரளானோர் கலந்து கொண்டு மீன்களை பிடித்து சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கொசப்பட்டி காரி கண்மாயில் நேற்று காலை 9.30 மணி அளவில் மீன் பிடித்த திருவிழா தொடங்கியது. முன்னதாக மீன்பிடித் திருவிழா குறித்து சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு விழா ஏற்பாட்டாளர்கள் மூலம் தெரியப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கண்மாய் பகுதியில் மீன் பிடிக்க சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் நேற்று அதிகாலை முதலே குவிய தொடங்கினர்.
விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டது. திருவிழாவில் மீன்களைப் பிடிக்க வலை, ஊத்தா உள்ளிட்டவைகள் பயன்படுத்தப்பட்டது. இதனிடையே மீன்பிடித் திருவிழா தொடங்கியதும் கரையில் தயாராக இருந்த பொதுமக்கள் மள மளவென கண்மாய்க்கில் இறங்கி தாங்கள் கொண்டு வந்திருந்த மீன்பிடி கருவிகளைக் கொண்டு மீனைபிடிக்க தொடங்கினர். அப்போது கண்மாய்க்குள் மீன்கள் அங்கும் இங்கும் தாவியதை கண்டு மீன்பிடித் திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் சந்தோசமடைந்தனர். மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் குறவை, கெளுத்தி, கெண்டை, விரால் உள்ளிட்ட மீன்களை பிடித்தனர். இதில் அனைத்து தரப்பு மக்களும் பாகுபாடு இன்றி கலந்து கொண்டதால் சமூக நல்லிணக்கம் உருவாகும் என விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.