நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் அம்பாளை வழிபடும் முறை பற்றி சொல்லப்பட்டுள்ளது. ஒரு சிலர் நவ கன்னிகையாகவும், மற்றும் பலர் நவ துர்க்கையாகவும் வழிபாடு செய்கிறார்கள்.
துர்க்கை: இவள் நெருப்பின் அழகு, ஆவேசப் பார்வை கொண்டவள். வீரத்தின் தெய்வம். சிவபிரியை. இச்சா சக்தியாவாள். வீரர்கள் தொடக்கத்திலும், முடிவிலும் வழிபடும் தெய்வம்.
லட்சுமி: இவள் மலரின் அழகு. அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள். செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கிரியா சக்தியானவள். லட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுதமயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருப்பாள். நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது.
சரஸ்வதி: இவள் வைரத்தின் அழகு. அமைதிப் பார்வையுடன் அழகாக பிரகாசிக்கிறாள். வெண் தாமரையில் வீற்றிருப்பவள். கல்வியின் தெய்வம். பிரம்பிரியை. ஞான சக்தி. அழியாத செல்வமான கல்வியை அனைவருக்கும் வழங்கும் சக்தியாக இவள் திகழ்கிறாள். இவளுக்கு மாயவரம் அருகில் உள்ள கூத்தனூர் என்னும் ஊரில் தனியாகக் கோவில் அமைந்துள்ளது.
தசமஹாவித்யா மஹாதேவியர் “தசமஹாவித்யா” என்று போற்றப்படும் பத்து மஹாதேவியரும் ஆதிபராசக்தியான அம்பாளின் அம்சங்களே ஆவர். காளி, தாரா, ஷோடசி, புவனேஸ்வரி, த்ரிபுரபைரவி, சின்னமஸ்தா, தூமாவதி, பகளாமுகி, மாதங்கி, கமலாத்மிகா என்னும் பெயர் கொண்ட இந்த பத்து மஹாதேவியரையும் நவராத்திரி சமயம் பூஜை செய்வது ரொம்பவும் சிறப்பானதாகும் . காளி – காளியை வணங்கினால் எல்லா தெய்வங்களையும் வணங்கியதாகும்.
ப்ரஹ்மா விஷ்ணு சிவோ கெளரீ லக்ஷ்மீர் கணபதி ரவி
பூஜிதா: ஸகல தேவா ய: காளீம் பூஜயேத் ஸதா
தாரா – சித்திகள் அளிப்பதில் தாரா தேவிக்கு சமமாக வேறு எந்த தெய்வமும் இல்லை.
நைவ தாரா ஸமா காசித் தேவதா ஸர்வ ஸித்திதா:
ஷோடசி -ஸ்ரீராஜராஜேஸ்வரி, ஸ்ரீலலிதா
த்ரிபுரஸுந்தரி என்று போற்றப்படும் தேவி.
ஸ்ரீமாதா மஹாராஜ்ஞீ ஸ்ரீமத் ஸிம்ஹாஸனேஸ்வரி
புவனேஸ்வரி – எல்லா ப்ரபஞ்சங்களுக்கும் மூலமான புவனேஸ்வரி ஞான வடிவானவள்.
தேவதா சித்கலாரூபா புவனேஸீ பராத்மிகா
த்ரிபுரபைரவி – ப்ரஹ்மா விஷ்ணு மஹேஸ்வரன் ஆகிய மூவரால் பூஜிக்கப்பட்ட தேவி
ப்ரஹ்மா விஷ்ணு மஹேஸானை: த்ரிதேவைர் அர்ச்சிதா புரா
த்ரிபுரேதி ததா நாம கதிதம் தைவதை: புரா:
சின்னமஸ்தா – சின்னமஸ்தா தேவியின் அருளிருந்தால் சதாசிவனாகவே ஆகிவிடலாம்.
யஸ்யா ப்ரஸாத மாத்ரேண நர: ஸ்யாத்தி ஸதாசிவ:
தூமாவதி – சத்ருக்களை அழித்து பக்தனைக் காக்கும் தேவி.
சேதினீம் துஷ்டஸங்கானாம் பஜே தூமாவதீமஹம்
பகளாமுகி – ப்ரஹ்மாஸ்திர ரூபிணி. பக்தனின் சத்ருக்களை அழிப்பாள்.
ஓம் பகளாம்பாயை வித்மஹே ப்ரஹ்மாஸ்த்ர வித்யாயை தீமஹி
மாதங்கி – வேண்டியது அனைத்தையும் தரும் ராஜமாதங்கி. மதுரை மீனாக்ஷி.
மாதா மரகதச்யாமா மாதங்கீ மதசாலினீ
கமலாத்மிகா – தனம், தான்யம், ஸௌபாக்கியம் தரும் மஹாலக்ஷ்மி.
மாதர் நமாமி கமலே கமலாயதாக்ஷி
பயாத் த்ராதும் தாதும் பலமபி ச வாஞ்சாஸமதிகம்
சரண்யே லோகானாம் தவ ஹி சரணாவேவ நிபுணென
தொகுப்பு: பிரியா மோகன்