சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது புதுக்கோட்டை எம்எல்ஏ வை.முத்துராஜா(திமுக) பேசுகையில், ‘‘புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து பிருந்தாவனம், அண்ணா சாலை, டிவிஸ் கார்னர் வழியாக மாலையீடு வரை செல்லும் சாலை நகரத்தின் மையப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கும் விதமாக, மருத்துவக் கல்லூரிக்கு செல்லும் ஆம்புலன்ஸ் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் எந்தவித தடையுமின்றி செல்ல ஏதுவாக, இந்த சாலையை 4 வழிச் சாலையாக தரமுயர்த்த வேண்டும்’’ என்றார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், ‘‘ ஒன்றிய அரசுக்கு டோல்கேட்டை எடுத்துவிட வேண்டும் என்று இந்த அரசு பலமுறை கடிதம் எழுதியிருக்கிறது. மாநில நெடுஞ்சாலைகள் 4 வழிச் சாலைகளாக தரம் உயர்த்தப்படுகின்றன; அங்கு டோல்கேட் எல்லாம் போடுவதில்லை. பொதுவாக, நகரப் பகுதிகளில் இரண்டுவிதமான சாலைகள் உள்ளன. ஒன்று, நகராட்சிக்கு சொந்தமான நகராட்சி சாலைகளாகும். மற்றொன்று மாநிலச் சாலைகளாகும். உறுப்பினர் கூறுகின்ற அந்தச் சாலை எந்தச் சாலை என்பதை ஆய்வு செய்து, போக்குவரத்துச் செறிவு இருக்குமேயானால், முதல்வரின் அனுமதியுடன், அடுத்து வருகின்ற நிதியாண்டில் துறையின் சார்பாக பணிகள் மேற்கொள்ளப்படும்.