பாடாலூர்: தமிழகத்தில் முதன் முறையாக பெரம்பலூரை சேர்ந்த நரிக்குறவ மாணவி, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா காரை கிராமம் மலையப்பநகரை சேர்ந்த நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகள் கோகிலா (19). பெரம்பலூர் தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்த இவர், பிளஸ் 2 தேர்வில் 459 மதிப்பெண் பெற்றிருந்தார். மருத்துவம் படிக்க விரும்பிய கோகிலா, இந்தாண்டு நீட் நுழைவுத்தேர்வு எழுதியிருந்தார். இந்நிலையில் கடந்த 13ம்தேதி நீட்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், மாணவி கோகிலா 161 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். பழங்குடியினர் 109 மதிப்பெண்கள் பெற்று இருந்தால் போதுமானது என கூறப்படும் நிலையில் மாணவி கோகிலா 161 மதிப்பெண் பெற்றுள்ளார். தமிழகத்திலேயே நீட் தேர்வில் நரிக்குறவர் சமுதாயத்தில் முதன் முதலில் தேர்ச்சி பெற்றுள்ள இவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து மாணவி கோகிலா கூறுகையில், ‘‘எம்பிபிஎஸ் சீட் கிடைத்தால், மருத்துவம் பயின்று எனது சமூக மக்களுக்கு சேவை செய்வதே ஆசை,’’ என்றார். தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்டி ஜாதி சான்றிதழ் இந்த ஆண்டு தான் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.