தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் அக்கட்சியின் சார்பில் மாநில இளைஞரணி செயலாளரான ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சூரியமூர்த்தி (52) போட்டியிடுவார் என கடந்த 18ம் தேதி அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து சூரியமூர்த்தி தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென சூரியமூர்த்தி மாற்றப்பட்டு புதிய வேட்பாளராக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன்( 52) போட்டியிடுவார் என கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ அறிவித்துள்ளார்.
வேட்பாளர் மாதேஸ்வரன், நாமக்கல் அருகே பொட்டணம் பகுதியைச் சேர்ந்தவர். 8 ஆண்டுக்கு மேலாக கட்சியின் மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். விவசாயம் மற்றும் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். சூரியமூர்த்தி பல ஆண்டுக்கு முன்பு பேசிய ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. அதனடிப்படையில் அவர் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.