Sunday, June 16, 2024
Home » நல்லம்பாக்கம் கூட்டுசாலையில் சிதறி கிடக்கும் மண் குவியலால் உயிர்ப்பலி அதிகரிப்பு: சீரமைக்க வலியுறுத்தல்

நல்லம்பாக்கம் கூட்டுசாலையில் சிதறி கிடக்கும் மண் குவியலால் உயிர்ப்பலி அதிகரிப்பு: சீரமைக்க வலியுறுத்தல்

by Suresh

கூடுவாஞ்சேரி: வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையை ஒட்டியுள்ள நல்லம்பாக்கம் கூட்டுசாலையில் சிதறி கிடக்கும் மண் குவியல்களால் அப்பகுதிகளில் நாள்தோறும் ஏராளமான வாகன விபத்துகளும் உயிர்ப்பலிகளும் அதிகரித்து வருகின்றன. அந்த சாலையில் சிதறி கிடக்கும் மண் குவியல்களை அகற்றி, சீரமைக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

சென்னை-திருச்சி செல்லும் ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் துவங்கி, பழைய மகாபலிபுரம் (ஓஎம்ஆர்) சாலைவரை சுமார் 18 கிமீ தூரத்துக்கு வண்டலூர்-கேளம்பாக்கம் பிரதான சாலை அமைந்துள்ளது. இந்த சாலை, மாநில ஊரக நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலையின் இருபுறத்திலும் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இங்கு நல்லம்பாக்கம் மற்றும் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையுடன் இணையும் கூட்டுச் சாலை உள்ளது. இந்த சாலைகள் வழியே நாள்தோறும் கருங்கல், எம்சாண்ட், மணல் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப் பொருட்களை ஏற்றிக்கொண்டு ஏராளமான கனரக லாரிகள் சென்று வருகின்றன. இதனால் நல்லம்பாக்கம் கூட்டு சாலை பகுதியில் ஏராளமான மண்குவியல்கள் சிதறி கிடக்கின்றன. மேலும், அந்த சாலை முழுவதும் மண் புழுதி படர்ந்து காணப்படுகிறது.

இந்த சாலையின் வழியே மணல், கருங்கல் தூள் மற்றும் பல்வேறு கனரக வாகனங்கள் மண் புழுதியை கிளப்பியபடி செல்வதால், அதை பின்தொடர்ந்து பிற வாகனங்கள் பாதை தெரியாமல் விபத்தில் சிக்குகின்றன. மேலும், நல்லம்பாக்கம் கூட்டு சாலையில் சிதறி கிடக்கும் மண் குவியல்களில், இருசக்கர வாகனம், கார் உள்ளிட்ட பல்வேறு இலகுரக வாகனங்கள் சிக்கி நிலைதடுமாறி கவிழ்கின்றன. இதை ஓட்டி வரும் வாகன ஓட்டிகள் படுகாயம் அடைந்து, உயிர்ப்பலிகள் அதிகரித்து வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநில ஊரக நெடுஞ்சாலை துறை உள்பட பல்வேறு துறை உயர் அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இந்த சாலையை சீரமைக்கவும், அவ்வழியே மணல் லாரிகள் சென்று வருவதை தடுக்கவும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, நல்லம்பாக்கம் கூட்டுசாலையில் சிதறி கிடக்கும் மண் குவியல்களை அகற்றி சீரமைக்கவும், அவ்வழியே கனரக வாகனங்கள் சென்று வருவதற்கு உரிய கட்டுப்பாடுகளை விதிக்கவும் மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

You may also like

Leave a Comment

five + sixteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi