சென்னை: தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த இசை நிகழ்ச்சியின்போது, சின்னத்திரை நடிகர் ஈஸ்வர், அடியாட்களை வைத்து தன்னை கொன்று விடுவதாக மிரட்டினார் என்று சினிமா பாடகர் கிருஷ்ணா என்பவர் பாதுகாப்பு கேட்டு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சினிமா பாடகர் திருவான்மியூரைச் சேர்ந்த பி.ஆர்.கிருஷ்ணா என்பவர் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், நான் கடந்த 13ம் தேதி தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நடந்த பாடகர் ஸ்ரீராம் இசை நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன். அங்கு சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் ரகுநாதன் சக நடிகர்களுடன் அமர்ந்திருந்தார்.
என்னை பார்த்ததும் என்னிடம் வந்து அங்கிருந்து உடனடியாக கிளம்புமாறு மிரட்டினார். உடனே நான் என்ன காரணம் என்று கேட்டபோது, எதுவும் கூறமுடியாது. உன்னை கொல்வதற்கு 10 பேரை தயார் செய்துள்ளேன். நீ இங்கிருந்து கிளம்பவில்லை என்றால், என்னுடன் இருக்கும் நபர்கள் மூலம் உன்னை அடித்து கொன்று விடுவேன் என்று மிரட்டினார். றகு நான் அங்கிருந்து சென்றுவிட்டேன். எனக்கும் சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் ரகுநாதனுக்கும் இடையே எந்த வித முன்விரோதமும் இல்லை. அவருடன் பேசி பல ஆண்டுகள் ஆகிறது.
எனக்கு உயிர் பயம் கொடுக்கும் அளவிற்கு என்னை மிரட்டியதற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை. அவர் மிரட்டியதில் இருந்து எனக்கு வெளியே செல்ல அச்சமாக இருக்கிறது. எனவே ஈஸ்வர் ரகுநாதனை அழைத்து எதற்கு என்னை மிரட்டினார் என்று விசாரிக்க வேண்டும். மேலும், பொது இடத்தில் அவர் என்னிடம் நடந்து கொண்ட சம்பவம் அனைத்தும் சிசிடிவியில் பதிவாகி இருக்கிறது. எனவே எனக்கு கொலை மிரட்டல் விடுத்த நடிகர் ஈஸ்வர் ரகுநாதனிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று புகாரில் பாடகர் தெரிவித்துள்ளார். பாடகர் அளித்த புகாரின் படி தேனாம்பேட்டை போலீசார் நட்சத்திர ஓட்டலில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரிக்கின்றனர்.