நாகை: நாகூர் ஆண்டவர் தர்கா 467வது ஆண்டு கந்தூரி விழாவையொட்டி நேற்றிரவு விடிய விடிய நடந்த சந்தனக்கூடு ஊர்வலத்தை தொடர்ந்து இன்று பெரியாண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்றனர். நாகை மாவட்டம் நாகூரில் புகழ்பெற்ற ஆண்டவர் தர்காவில் 467வது கந்தூரி விழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 21ம் தேதி வாணவேடிக்கை, 22ம் தேதி இரவு பீர் அமர வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று நடந்த கந்தூரி விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.
இதையடுத்து நேற்று மாலை நாகூர் தர்காவில் பாரம்பரிய முறைப்படி அரைக்கப்பட்ட சந்தனங்கள், குடங்களில் நிரப்பப்பட்டு நாகை ஜமாத்தார்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் சந்தன குடங்கள், நாகை யாஹூசைன் பள்ளிவாசலுக்கு எடுத்து வந்தனர். இதன்பின் யாஹூசைன் பள்ளிவாசலில் இருந்து இரவு 7 மணிக்கு சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டது. நாகூர் தர்கா அலங்கார வாசலுக்கு இன்று அதிகாலை 5 மணிக்கு சந்தனக்கூடு ஊர்வலம் வந்தது. இதைதொடர்ந்து அங்குள்ள கூட்டுப்பாத்திகா மண்டபத்தில் பாத்தியா ஓதிய பின்னர் வாணக்காரத்தெரு, தெற்கு தெரு, அலங்காரவாசல் வழியாக வந்து அங்குள்ள பாரம்பரிய முறைகாரர் வீட்டில் சந்தன குடத்தை வாங்கி கூட்டில் வைக்கப்பட்டது.
இதையடுத்து கால்மாட்டு வாசல் வழியாக சந்தனக்குடம், தர்காவின் உள்ளே கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து இன்று காலை 6 மணிக்கு தர்காவில் உள்ள பெரியாண்டவர் சமாதியில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது. தர்காவின் பரம்பரை கலிபா, ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசினார். இந்த நிகழ்ச்சியில் சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் யாத்ரீகர்கள் திரளாக பங்கேற்றனர். நாளை (25ம் தேதி) கடற்கரைக்கு பீர் செல்லும் நிகழ்ச்சி, வரும் 27ம் தேதி புனித கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.