குமரி: நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து கடத்தி செல்லப்பட்ட குழந்தை 4 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது. கடத்தி செல்லப்பட்ட குழந்தையை கேரள மாநிலம் கொல்லத்தில் தனிப்படை போலீசார் மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து கடந்த 23ம் தேதி இரவு பிளாட்பார்ம் பகுதியில் தூங்கி கொண்டிருந்த நரிக்குறவ தம்பதியின் 6 மாத கை குழந்தையை ஒரு பெண் கடத்தி சென்றார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டதில், நாகர்கோவில் ரயில் நிலையம் மூலமாக குழந்தை கடத்தப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து வழிநெடுகிலும் உள்ள சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. 30க்கும் மேற்பட்ட கேமராக்களை ஆய்வு செய்ததில், குழந்தையை கடத்திய பெண் கேரள மாநிலம் கொல்லத்தில் இறங்கியது தெரியவந்தது. தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்த தனிப்படை போலீசார், குழந்தையை பத்திரமாக மீட்டனர். மேலும் குழந்தையை கடத்திச் சென்ற சாந்தி என்பவரை கைது செய்த தனிப்படை போலீசார், நாகர்கோவில் அழைத்து வருகின்றனர். இவருக்கு பின்னர் மிகப்பெரிய குழந்தை கடத்தல் கும்பல் இருக்கிறதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.