நாகை: நாகப்பட்டினத்தில் அதிபக்த நாயினார் சிவபெருமானுக்கு தங்கமீன் படைக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. 63 நாயன்மார்களில் மீனவர் குளத்தை சேர்ந்த அதிபக்த நாயன்மார் சிவபெருமான் மீது இருந்த அதீத பக்தியால் எப்போதுமே தான் பிடிக்கும் மீனில் முதல் மீனை சாமிக்காக கடலில் விடுவார். இவரது பக்தியை சோதிக்க விரும்பிய சிவபெருமான் ஒரு நாள் அதிபக்த நாயனார் வீசிய வலையில் தங்க மீனை விழச்செய்தார். ஆனால், அதிபக்த நாயன்மார் தங்க மீனையும் சிவனுக்காகவே கடலில் விட்டு விட்டார். அவரது பக்தியை கண்டு மெச்சிய சிவபெருமான் அதிபக்த நாயன்மாருக்கு நேரில் காட்சியளித்தார்.
இதனை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தங்க மீன் விடும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழாவையொட்டி நம்பியார் நகர் புதிய ஒளி மாரியம்மன் ஆலயத்தில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி மீன்களை சிவா வாத்தியங்கள் முழங்க சிவனடியார்கள் ஊர்வலமாக கடற்கரைக்கு எடுத்து வந்தனர். பின்னர் நாகை புதிய கடற்கரையில் தங்க மீன் விடும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஒட்டி நாகை புதிய கடற்கரையில் நூற்றுக்கணக்கான பக்தர்களும், மீனவர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.