சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளில் பவளக்கால் விமானம் மூலம் கபாலீஸ்வரர் வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். பின்னர், அம்மை மயில் வடிவில் காட்சிதருதல் நிகழ்ச்சியும், கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், முருகர் வீதியுலா நடந்தன. 10 நாட்களுக்கு பகல் மற்றும் இரவில் ஐந்திரு மேனிகள் வீதி உலா நடக்கிறது. 7வது நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. காலை 9 மணிக்கு நான்கு மாட வீதியில் உலா வந்த தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான மக்கள் சூழ்ந்தனர். பக்தர்கள் கபாலி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பெரிய தேரினை தொடர்ந்து கற்பகாம்பாள், சண்டிகேஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமாள் உள்ளிட்ட தெய்வங்களும் சிறிய தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பக்தர்கள் அனைவரும் உணவருந்த நேற்று முழுவதும் இந்த பகுதியில் அன்னதானம் வழங்கப்பட்டது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், திருட்டு நிகழாமல் பாதுகாக்கவும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். திரு விழாவின் முக்கிய நிகழ்வான அறுபத்துமூன்று நாயன்மார்களோடு வீதியுலா வருதல் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து, மார்ச் 25ம் தேதி திருக்கல்யாண உற்சவம் தொடங்கி, கொடியிறக்கம் நடைபெறும்.