மும்பை: ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத்தில் நேற்று நடந்த போட்டியில் ஐதராபாத், கொல்கத்தா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை சேர்த்தது. இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் களமிறங்கியது. இதில் அதிகபட்சமாக கேப்டன் எய்டன் மார்க்ரம் 41 ரன்கள் எடுத்தார். ஹெயின்ரிச் கிளாசன் 36 ரன்களும், அப்துல் சமாத் 21 ரன்களும், ராகுல் திரிபாதி 20 ரன்களும், மயங்க் அகர்வால் 18 ரன்களும், அபிஷேக் சர்மா 9 ரன்களும், மார்கோ ஜான்சன் ஒரு ரன்னும் எடுத்தனர். புவனேஷ்வர் குமார் 5 ரன்களுடனும், மயங்க் மார்கண்டே ஒரு ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் கடைசி ஓவரில் ஒன்பது ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பந்துவீசி வெறும் மூன்று ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதனால் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் கேகேஆர் அணி வெற்றி பெற்றது.
4 ஓவர்களில் வெறும் 20 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதுகுறித்து வருண் சக்கரவர்த்தி கூறுகையில், கடைசி ஓவரை வீசும்போது என் இதயத்துடிப்பு எகிறிவிட்டது. ஆனால் ஓவரை வீசுவதற்கு முன்பாக நீண்ட தூர பவுண்டரி எல்லையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். அதேபோல் 2வது பவுலிங்கின் போது பந்து அதிகளவில் வழுக்கியது. அதனால் பவுண்டரி திட்டத்தோடு மட்டுமே பந்துவீசினேன். முதல் ஓவரில் நான் 12 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தேன். மார்க்ரம் இரு பவுண்டரிகளை விளாசி தள்ளினார். ஆனால் அடுத்த 3 ஓவர்களை சிறப்பாக வீசினேன். டி20 கிரிக்கெட் அப்படி தான் இருக்கும். கடந்த ஆண்டில் 85 கிமீ வேகத்தில் தான் பந்துவீசினேன். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொஞ்சம் வேகத்தை அதிகரித்துள்ளேன். பயிற்சியில் ஏராளமானவற்றை முயற்சி செய்து வருகிறோம்’’ என்றார்.