திருவனந்தபுரம்: மூணாறில் 2 மாடிக்கு மேல் கட்டிடம் கட்ட கேரள உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள மூணாறு சர்வதேச சுற்றுலாத்தலமாகும். இயற்கை எழில் சூழ்ந்த இந்தப் பகுதியில் சமீபகாலமாக பல அடுக்கு மாடி கட்டிடங்கள் கட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. இதை விசாரித்த உயர்நீதிமன்றம், அடுக்குமாடி கட்டிடங்கள் கட்ட அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டுமென உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவையும் மீறி பல அடுக்குமாடி கட்டிடங்கள் இங்கு கட்டப்பட்டன.
இந்நிலையில் மூணாறு தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக மட்டும் தலைமை நீதிபதி தன்னுடைய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி முகம்மது முஷ்டாக் மற்றும் சோபி தாமஸ் ஆகியோர் அடங்கிய ஒரு சிறப்பு அமர்வை நியமித்து உத்தரவிட்டார். இந்த சிறப்பு அமர்வு மூணாறு தொடர்பான வழக்குகளை நேற்று விசாரித்தது. அப்போது மூணாறில் 2 மாடிக்கு மேல் கட்டிடங்களை கட்ட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு 2 வாரங்களுக்குப் பின் மீண்டும் விசாரணைக்கு வரும். அதுவரை இந்த இடைக்காலத் தடை உத்தரவு அமலில் இருக்கும்.