டெல்லி: நடிகர் விஷாலின் புகார் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளக்கம் அளித்துள்ள ஒன்றிய அரசின் தணிக்கை வாரியம் இடைத்தரகர்களை நம்பி ஏமாற்ற வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது. மார்க் ஆண்டனி திரைப்படத்தின் ஹிந்தி பதிப்பை தணிக்கை செய்ய மும்பையை சேர்ந்த தணிக்கை வாரிய அதிகாரிகள் ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இது குறித்து தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தை சேர்ந்த மூத்த அதிகாரி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தணிக்கை வாரியம் அளித்துள்ள விளக்கத்தில் திரைப்பட தணிக்கையில் வெளிப்படை தன்மையை கடைபிடிக்கவே இ-சினிபிரமான் என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைன் விண்ணப்பங்கள் ஏற்கப்படுவதாக தெரிவித்துள்ளது. ஆனால், பல திரைப்பட தயாரிப்பாளர்கள் இடைத்தரகர்களை அணுகுவதாகவும் அவ்வாறு தணிக்கை வாரியத்தின் பெயரில் யாரவது பணம் கேட்டால் புகார் அளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் விஷாலின் புகார் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படம் வெளியீட்டிற்கு முன்கூட்டியே தணிக்கை சான்றுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அவரசர தேவைக்கு தணிக்கை வாரிய உயர் அதிகாரிகளை அணுகுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.