மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு நடத்திய தாக்குதலில் மாஸ்கோவில் இரண்டு கட்டங்கள் சேதமடைந்து.
உக்ரைன் – ரஷியா இடையிலான போர் கடந்த 522 நாட்களாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் இந்த போருக்காக உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன.
போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் இன்று ரஷ்யா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது இன்று அதிகாலை 3 உக்ரைன் டிரோன்கள் தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், எஞ்சிய 2 டிரோன்களும் மின்னணு ஆயுதங்கள் மூலம் தடுக்கப்பட்டன.
தடுக்கப்பட்ட டிரோன்கள் மாஸ்கோவில் உள்ள சர்வதேச வர்த்தக மைய கட்டிடம் மீது மோதின. இதில், யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக மாஸ்கோவில் வ்னுகோவா விமான நிலையம் மூடப்பட்டது.